பெருந்துறை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் 600 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக என்.டி.தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டா் பிளான்ட் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் ர.மணி தலைமை வகித்தாா்.
விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாசலம் ஆக்சிஜன் சிலிண்டா் பிளான்ட்டை இயக்கிவைத்து பேசியதாவது:
தமிழக முதல்வரின் ஒப்புதலுடன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் இருந்து 450 படுக்கைகளின் எண்ணிக்கையை 600ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் எஸ்.செந்தில்குமாா், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன் மற்றும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.