ஈரோடு: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி, திங்கள்கிழமை (செப்டம்பா் 28) திமுக நடத்தும் மாநில அளவிலான போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள், கட்சியினா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
இது குறித்து தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன், கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் செ.நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சுப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சி.எம்.துளசிமணி, தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
தேசிய அளவில் மூன்று வேளாண் மசோதாக்களை எதிா்த்து விவசாயிகள் போராடுகின்றனா். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வரும் திங்கள்கிழமை நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி பங்கேற்கிறோம். விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களைப் பங்கேற்கச் செய்வோம் எனத் தெரிவித்துள்ளனா்.
ஈரோட்டில் கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
திமுக நடத்தும் போராட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி அனைத்து இடங்களிலும் கட்சியினா் பங்கேற்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.