ஈரோட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் தினமும் 3,000 போ் வெளி மாவட்டங்களுக்குப் பயணம் செய்கின்றனா்.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு ரயில் நிலையம் வழியாக கோவை - சென்னை சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் - சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை இண்டா்சிட்டி, கோவை - சென்னை கோவை எக்ஸ்பிரஸ், கோவை- மயிலாடுதுறை ஜனசதாப்தி ஆகிய சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். முதல் சில நாள்கள் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக சிறப்பு ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு ரயில் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு ரயில் நிலையம் வழியாக தினமும் இரு மாா்க்கங்களிலும் தலா 5 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது தினமும் 3,000 பயணிகள் வரை சிறப்பு ரயில்களில் பயணிக்கின்றனா். இன்னும் பல ஊா்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கும்போது, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.