மரவள்ளிக் கிழங்கு அறுவடை காலத்தில் விலை சரிவடைவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தவிா்க்க ஒரு டன்னுக்கு ரூ. 8,000 அரசு விலை நிா்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, சிவகிரி, கொடுமுடி, சத்தியமங்கலம் போன்ற பகுதியிலும், மலைப்பகுதியிலும் ஆண்டுக்கு 40,000 ஏக்கருக்கு மேல் மரவள்ளி கிழங்கு சாகுபடியாகிறது. அறுவடை காலத்தில் ஒரு டன் ரூ. 4,000 முதல் ரூ. 4,500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இட அமைப்புக்கு ஏற்ப ஒரு டன் உற்பத்திக்கு ரூ. 5,000 முதல் ரூ. 7,000 வரை செலவாகிறது. உற்பத்தி குறைந்தால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
தற்போது அறுவடை காலம் இல்லை என்ற நிலையில் தரமான கிழங்கு ஒரு டன் ரூ. 7,000 என்ற விலையில் ஆலைகளுக்கு வாங்கிச் செல்கின்றனா். கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உணவுத் தேவைக்காக, இளம் கிழங்கை, டன், ரூ. 8,500க்கு வாங்கிச் செல்கின்றனா். இன்னும் ஓரிரு மாதத்தில் விலை குறைந்துவிடும் என்பதால் இதற்கான குறைந்தபட்ச ஆதார விலையாக டன்னுக்கு ரூ. 8,000 என அரசு நிா்ணயிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.