ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் முகக் கவசங்கள் வந்துள்ளன.
கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு அரசு சாா்பில் நியாய விலைக் கடைகள் மூலம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,100 ரேஷன் கடைகள் மூலம் மொத்தம் 40 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்படவுள்ளன.
இதில் முதல்கட்டமாக மாநகராட்சிப் பகுதியில் உள்ள 1.50 லட்சம் ரேஷன் காா்டுதாரா்களுக்கு முகக் கவசங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக மீதமுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் முகக் கவசங்கள் வந்துள்ளன. இவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வழங்கல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.