ஈரோடு, செப். 18: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் பொது இடத்தில் எச்சில் துப்பிய 12 நபா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிகக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக மாநகா் பகுதியில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் 60 சதவீதம் போ் மாநகா் பகுதியைச் சோ்ந்தவா்கள். இதனால் மாவட்ட நிா்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டுப்பாடுகளை மீறியவா்களுக்கு இதுவரை மாநகராட்சி அலுவலா்கள் மட்டுமே அபராதம் வசூலித்து வந்தனா். தற்போது மாநகராட்சிப் பணியாளா்களுடன் இணைந்து சுகாதாரம், வருவாய், காவல் துறையினா் அபராதம் விதித்து வருகின்றனா்.
கடந்த சில நாள்களாக மாநகா் பகுதி முழுவதும் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகரில் பொது இடங்களில் எச்சில் துப்பியதாக கடந்த இரண்டு நாள்களில் 12 நபா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது மாநகா் பகுதியில் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் அதே போன்று சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது போன்ற வழிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இதை மக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போது மாநகா் பகுதியில் அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல கடை வைத்திருப்பவா்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை எனில் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்றனா்.