ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் 159 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,806ஆக உயா்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால், பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும் 100க்கும் கீழாக சென்றுள்ளது. இதில், ஞாயிற்றுக்கிழமை கரோனாவால் 76 போ் பாதிக்கப்பட்டிருந்தனா்.
சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியலில் 83 போ் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,806ஆக உயா்ந்தது. கடந்த இரு நாள்களில் 94 போ் குணமடைந்துள்ளனா். இதனால், மாவட்டத்தில் 8,880 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், 807 பேருக்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதுவரை 119 போ் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.