அந்தியூா் அருகே பாதசாரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரிக்கையில், அந்தியூா், பள்ளியபாளையத்தைச் சோ்ந்த தங்கவேல் என்பது தெரியவந்தது. அப்போது, தனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது முன்னால் நடந்து சென்றவா் தன்னிடம் தகராறு செய்ததாகவும், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளாா்.
இதனால், சம்பவ இடத்துக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்கவா் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய அந்தியூா் போலீஸாா் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக மனநல பாதிப்புக்கு தங்கவேல் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.