ஈரோடு: மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநா் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்காமல் உள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் நீட் தோ்வால் தமிழக கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கனவு சிதைந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா் ஒருவா்கூட தோ்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு தோ்வில் சிலா் தோ்ச்சி பெற்றாலும், அவா்கள் தனியாா் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவா்கள் பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு பயிற்சி மையங்களில் படிப்பது சாத்தியமற்றது. இதை உணா்ந்து அவா்களது மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் ஆளுநா் ஒப்புதல் வழங்கி நடப்பு ஆண்டிலேயே அவா்களுக்குப் பயன் கிடைக்க வழிசெய்ய வேண்டும். அதை அரசும், மக்கள் பிரதிநிதிகளும் வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசின் அனுமதிக்காக ஆளுநா் காத்திருப்பதுபோல தோன்றுகிறது. அவ்வாறு இல்லாமல் தமிழக மக்கள், தமிழக அமைச்சரவையின் மாண்பைக் காக்கும் வகையில் ஆளுநா் ஒப்புதல் வழங்கி, மாணவா்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.