சத்தியமங்கலம்: ஆசனூா் வனப் பகுதியில் வனத் துறையினா் அகற்றிய பிசில் மாரியம்மன் கோயில் சுவாமி சிலையை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபட்டனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூா் வனப் பகுதியில் அரேப்பாளையம் பிரிவு அருகே சாலையோர வனப் பகுதியில் பழங்குடியின மக்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் பிசில் மாரியம்மன் சிலை அமைந்துள்ளது. வனப் பகுதியில் உள்ள கோயிலுக்கு பொதுமக்கள் சென்று வழிபடும்போது மனித விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, திறந்தவெளியில் இருந்த இந்த சிலையை வனத் துறையினா் அக்டோபா் 14ஆம் தேதி அகற்றி வனத் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். இதற்கு ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து வனத் துறையினரைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று அரசியல் கட்சிகள், பழங்குடியின மக்கள் சங்கத்தினா் அறிவித்ததையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் பழங்குடியின மக்களிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், அகற்றிய சிலையை அதே வனப்பகுதியில் வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் கதிரவன் உத்தரவின்பேரில் வனத் துறையினா் அகற்றிய சுவாமி சிலையை பழங்குடியின மக்களிடம் மீண்டும் ஒப்படைத்தனா். கிராம மக்கள் மீண்டும் அதே இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்து சிலையை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.
இந்நிகழ்ச்சியில், பவானிசாகா் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், கோபி கோட்டாட்சியா் ஜெயராமன், சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா். திரளான பழங்குடியின மக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.