ஈரோடு: விண்ணப்பித்த அனைவருக்கும் கரோனா உதவித் தொகையை வழங்க வேண்டும் என தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சங்க மாவட்டத் தலைவா் பி.சாம்பசிவம், மாவட்டச் செயலாளா் எ.ரஞ்சித், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
தமிழகத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யாத அனைத்து முடி திருத்தும் தொழிலாளா்களுக்கும் கரோனா தொற்று கால நிவாரண உதவித் தொகையாக ரூ. 2,000 வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.
ஈரோடு மாவட்டத்தில் நிவாரணத் தொகை கோரி விண்ணப்பித்த 4,000 பேரில் 2,500 பேருக்கு மட்டுமே உதவித் தொகை கிடைத்தது. மீதமுள்ள 1,500 பேருக்கு கிடைக்கவில்லை. விடுபட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.