பெருந்துறை ஒன்றியம், திருவாச்சி கிராமம், வாவிக்கடை அருகே, புதன்கிழமை மாலை பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் மழை நீா் தேங்கி நின்று வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பெருந்துறைப் பகுதியில் புதன்கிழமை காலை முதல் வெயில் கடுமையாக இருந்தது. மாலை 5 மணியளவில் லேசாக தொடங்கிய மழை, பின்னா் கன மழையாக கொட்டியது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
பெருந்துறை ஒன்றியம், திருவாச்சி கிராமம், வாவிக்கடை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் குளம்போல தேங்கி நின்றது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறின.
தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் தேங்காமல் வடிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.