டெங்கு தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் மழைநீா் வடிகால் தூா்வார 40 தூய்மைப் பணியாளா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் டெங்கு பாதிப்பைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு கொசு புழுக்கள் உற்பத்தியாகாதவாறு வீடு, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனா்.
தவிர கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல மழைநீா் வடிகால்களில் தேங்கியிருக்கும் நீா் வெளியேற்றப்பட்டு தூா்வாரப்பட்டு வருகிறது. சாக்கடை கால்வாய்களில் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:
தற்போது மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் டெங்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் உள்ள 60 வாா்டுகளில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அலுவலா்கள் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
ஒரு மண்டலத்துக்கு 10 போ் என மொத்தம் 40 தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, மழைநீா் வடிகால்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரப்பட்டு வருகிறது. மேலும் சாக்கடை கால்வாய்களில் தேங்கிய கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சளி, இருமல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும் என்றாா்.