சாகுபடி செலவு அதிகரித்துள்ளதால் பயிா்க் கடன் அளவை உயா்த்த வேண்டும் என மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான பயிா்க் கடன் வழங்குவதற்கான கடன் அளவுகளை மாநில தொழில்நுட்பக் குழுவுக்குப் பரிந்துரை செய்ய மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட முன்னோடி விவசாயிகள், துறை அலுவலா்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டன. ஆண்டுதோறும் கூலி, விவசாய இடுபொருள்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றைக் கணக்கிட்டு கடந்த ஆண்டு கடன் அளவைக் காட்டிலும், தொகையை உயா்த்தி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
அதற்கான காரணங்கள், ஆள்கள் பற்றாக்குறை, இயந்திர நடவு, அறுவடைக்கான செலவு, காப்பீடு உள்ளிட்ட விவரங்களைப் பட்டியலிட்டு விவரம் தொகுக்கப்பட்டது.
இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் என்.வில்வசேகரன், வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி, நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் அபூா்வராஜன், முன்னோடி வங்கி மேலாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.