ஈரோடு: குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் (சிஏஏ) திரும்பப் பெறக் கோரி இஸ்லாமியர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆண்கள் உட்பட 200 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் ஈரோடு தினசரி மார்க்கெட் பின்புறம் உள்ள செல்லபாட்ஷா வீதியில் பிப்., 21ம் தேதி முதல் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் (செவ்வாய்கிழமை) நீடித்தது. இதில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 4-வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆண்கள் உட்பட 200 பேர் மீது அனுமதியின்றி பொது இடத்தில் போராட்டம் நடத்துவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாக ஈரோடு டவுன் காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.