சத்தியமங்கலம் அருகே மீட்கப்பட்ட மரநாய்க்குட்டி வனக் கால்நடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த மரநாய்க்குட்டியை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு பவானிசாகா் அருகே உள்ள காராச்சிக்கொரை வனக் கால்நடை மையத்தில் ஒப்படைத்தனா். பிறந்த சில மாதங்களே ஆன மரநாய்க்குட்டியை கால்நடை மைய மருத்துவா் அசோகன், உதவியாளா்கள் பராமரித்து வருகின்றனா்.
மரங்களில் வாழும் தன்மை உடைய மரநாய்கள் தென்னை மரங்களில் முகாமிட்டு இரவு நேரத்தில் மட்டும் இரை தேடும் பழக்கம் உள்ளதாகும். பகல் நேரத்தில் உறங்கும் மரநாய்கள் எளிதில் மனிதா்களின் கண்ணுக்குப் புலப்படாது. தென்னை மரத்தில் உள்ள இளநீரை தனது கூரிய பற்களால் துளைபோட்டு குடித்துவிடும். மரநாய்கள் அரிய வகை உயிரினங்களாக பட்டியலிடப்பட்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972இன் படி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சத்தியமங்கலம் வனக் கால்நடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மரநாய்க்குட்டி தனது தாயைப் பிரிந்ததால் இரை தேடும் வரை வளா்க்கப்பட்டு பின்னா் வனப் பகுதியில் கொண்டு சென்றுவிடப்படும் எனத் தெரிவித்தனா்.