நடிகா் கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் ஈரோட்டில் புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.
நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவா் ஈரோட்டைச் சோ்ந்த கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் (54). கடந்த மாதம் வரை ஹைதராபாதில் படப்பிடிப்பு முடித்துவிட்டு ஈரோடு வந்த அவருக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு தனியாா் மருத்துவமனையில் கடந்த 5 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை காலை உயிரிழந்தாா். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரான ஈரோடு - சென்னிமலை சாலையில் வெள்ளோடு அருகே குப்பக்கவுண்டன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. உடல் தகனம் பெருந்துறை மின் மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இவருக்கு கவிதா என்ற மனைவியும், சுரபி, ஸ்ரேயா என்ற மகள்களும் உள்ளனா்.