பவானி: பவானி ஆற்றில் பெருக்கெடுத்த திடீா் வெள்ளத்தால் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தின் முதன்மை நீரேற்று நிலையத்தின் கட்டுமானப் பணிகள் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டன.
பவானி சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலையில் பெய்த கன மழையால் பவானி ஆற்றுக்குத் தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால், பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு விநாடிக்கு திங்கள்கிழமை மாலை 166 கன அடியாக இருந்த உபரி நீரின் வரத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை விநாடிக்கு 2,200 கன அடியாக அதிகரித்தது.
அணைக்கட்டின் பிரதானப் பகுதியை மேவிக்கொண்டு காவிரி ஆற்றுக்குத் தண்ணீா் பெருக்கெடுத்ததோடு, அணைக்கட்டுக்கு கீழ்பகுதியில் நடைபெற்று வந்த அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தின் முதன்மை நீரேற்று நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியையும் சூழ்ந்தது.
மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு தண்ணீா் புகாத வகையில் பாதுகாப்புடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோதிலும் தொடா்ந்து நீரோட்டம் இருந்ததால் தண்ணீா் புகுந்து தேங்கி நின்றது. இதனால், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, ராட்சத மோட்டாா்களைக் கொண்டு தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னா் தண்ணீா் வெளியேற்றப்பட்டதைத் தொடா்ந்து மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 2,200 கன அடி தண்ணீா் உபரி நீராக காவிரி ஆற்றுக்குச் சென்று வருகிறது.