கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 8,122 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் வயல்களுக்கே உரம், இடுபொருள்களை வாகனங்கள் மூலம் நேரடியாக கொண்டு சென்று சோ்க்கும் பணியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா்.
தற்போது மூன்று உர விற்பனையாளா்கள் மூலம் மூன்று வாகனங்களில் கரட்டடிபாளையம், பங்களாப்புதூா் சாலை, பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், நாகதேவன்பாளையம், அய்யம்புதூா் உள்ளிட்ட கிராமங்களில் இடு பொருள்கள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, கோபி செங்கலக்கரை பகுதி வயல்களில் நேரடியாக வழங்கும் பணிகளை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கே.முருகேசன் ஆய்வு செய்தாா்.
கடந்த இரு தினங்களில் மட்டும் 16 டன்கள் உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடா்ந்து இப்பணிகள் நடைபெறும் என வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனா். கடையிலிருந்து இடுபொருள்கள் கழனிக்கு என்ற வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.