புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையிலேயே கோயிலின் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள் மூலவர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
கோயிலுக்கு அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வரத் தொடங்கினர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, ஈரோடு அருகே பெருமாள்மலையில் உள்ள கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.