வெள்ளக்கோவில்: கண்டுபிடிப்பை கைவிட வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளக்கோவிலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர், மேற்கு மண்டல காவல் துறை தலைவர், கோவை மாநகர காவல் ஆணையரிடம் வியாழக்கிழமை புகார் மனு அளித்தார்.
வெள்ளக்கோவில், மூலனூர் சாலையைச் சேர்ந்தவர் செளந்தரராஜன் (45). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஸ்டில்டு நீரில் இயங்கக் கூடிய புதிய வகை என்ஜினைக் கண்டுபிடித்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த என்ஜினை இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஜெனரேட்டரில் மாற்றம் செய்து பயன்படுத்தலாம். இதற்கு "சூப்பர்சோனிக் ஹைட்ரஜன் என்ஜின்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனது கண்டுபிடிப்பை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்றும் ஜப்பான் நாடு இதனைத் தயாரிக்க காப்புரிமை வழங்கியுள்ளதால் அங்கு அறிமுகப்படுத்தப்படும் எனறும் சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளக்கோவிலில் உள்ள இவரது வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 14) ஒரு கடிதம் வந்ததாம். அதில், "இந்தக் கண்டுபிடிப்பைத் தொடரக் கூடாது. மீறினால் கொலை செய்யப்படுவாய்' என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோவையில் உள்ள காவல் துறை மேற்கு மண்டல தலைவர் கு.பெரியய்யாவிடமும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் சௌந்தரராஜன் வியாழக்கிழமை புகார் மனு அளித்தார். முன்னதாக வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் தனது புகாரை காவல் துறையினர் பெற மறுத்துவிட்டதாக சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.