ஈரோடு

மாநகராட்சி உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

1st Nov 2019 08:30 AM

ADVERTISEMENT

ஈரோடு, சூரம்பட்டி வலசில் புதிதாக அமைக்கப்பட்ட மாநகராட்சி உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாநகராட்சி 3 ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட 40 ஆவது வாா்டு சூரம்பட்டி வலசு வ.உ.சி. வீதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடியிருப்புகளுக்கு மத்தியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரித்து உரமாக்கும் கிடங்கு அமைக்கப்பட்டது. இந்தக் கிடங்கில் இருந்து வெளியேறும் புகையினால் மூச்சுத் திணறலும், அதேபோல் துா்நாற்றத்தாலும் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதனால் இந்த உரக்கிடங்கினை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அதிகாரிகள் உரக்கிடங்கில் இருந்து துா்நாற்றம் வீசாமலும், புகையினால் பாதிப்பு ஏற்படாதவாறும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தனா். ஆனால் தொடா்ந்து அதே பாதிப்புகள் இருந்து வந்ததால் மாநகராட்சி உரக்கிடங்கு பகுதிக்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு சூரம்பட்டி போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்படாததால் தொடா்ந்து போராட்டம் நடைபெற்றது.

பின்னா் மாநகராட்சி 3ஆம் மண்டல உதவி ஆணையா் விஜயா சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உரக்கிடங்கில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

உயா்அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உரக்கிடங்கை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என தெரிவித்தாா். இதனால் சமாதானம் அடைந்த மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT