சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூர் ஊராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை இரவு ஊராட்சி பணியாளருடன் அரசியல் கட்சியினர் மது அருந்தியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் அப்துல் வஹாப் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
மே தினமான புதன்கிழமை செண்பகபுதூர் ஊராட்சி அலுவலகத்தில் சிலர் மது அருந்துவதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் அங்கு சென்றனர். அப்போது அலுவலக அறைக்குள் திமுக பிரமுகருடன் ஊராட்சி பணியாளர் மது அருந்தியது தெரியவந்தது.
இதனை இளைஞர்கள் விடியோ எடுத்து கட்செவி அஞ்சலிலில் வெளியிட்டனர். இந்தக் காட்சி வேகமாகப் பரவியது. இந்நிலையில், வியாழக்கிழமை கிராம மக்கள் 25-க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஊராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வஹாப், விசாரணை நடத்தினார். இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.