ஈரோடு மாவட்டத்தில் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்களை பதிவு செய்ய தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது.
இதில் முதல்கட்டமாக ஈரோடு மாநகரில் 4 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் தெரிவித்தாவது:
ஈரோடு மாநகரில் அனைத்து வாகனங்களின் எண்களை பதிவு செய்ய தானியங்கி கேமராக்கள் வைக்க 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதல் கட்டமாக ஈரோடு காவிரி சோதனைச் சாவடி, கிருஷ்ணா திரையரங்கு அருகில், பன்னீர்செல்வம் பூங்கா, திண்டல் ஆகிய 4 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக செங்கோடம்பாளையம், மணிக்கூண்டு, ஜவான்பவன், ரயில் நிலையம் அருகில், பவானி சாலை மூலப்பட்டறை அருகில், மேட்டூர் சாலை அடையார் ஆனந்தபவன் அருகில், சித்தோடு சாலை பாரதி திரையரங்கு அருகில், லோட்டஸ் மருத்துவமனை அருகில், ஆசிரியர் காலனி, ஆட்சியர் அலுவலகம் அருகில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில், பேருந்து நிலையம் அருகில், ரங்கம்பாளையம் கலைக்கல்லூரி அருகில் ஆகிய 12 இடங்களில் மே மாத இறுதிக்குள் கேமரா பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.
இந்த கேமராக்கள் மூலம் சாலைகளில் இருபுறமும் வாகனங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எவ்வளவு கி.மீ. வேகத்தில் வருகிறது என்பதையும், கடந்து செல்லும் வாகனங்களின் நேரம், தேதியுடன் பதிவு எண்களை 24 மணி நேரமும் துல்லியமாக கண்டறிய முடியும்.
மேலும் அனைத்து கேமரா பதிவுகளும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் கணினியில் பார்க்க முடியும் என்றார்.