கணினி சேவை கோளாறுகளை சரிசெய்யக் கோரி ஈரோட்டில் அஞ்சல் ஊழியர்கள் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஈரோடு கோட்ட தலைவர் வி.எஸ்.குமாரசாமி தலைமை வகித்தார். செயலாளர் கே.நடராஜன், பொருளாளர் வி.பி.ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாடு முழுவதும் அஞ்சல் துறை ஊழியர்களுக்கு கணினி தொடர்பான பயிற்சிகளை முறையாக வழங்க வேண்டும். கணினியின் நெட்வொர்க் (இணையதளம்) வசதி போதுமானதாக இல்லாததால் பணிகள் தாமதமாகிறது. இதனால் கணினி சேவை கோளாறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அஞ்சல் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.