ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மஞ்சளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்து உலக அளவில் புகழ்பெறுவதுடன், மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட பகுதியில் விளையும் விளைப் பொருள்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பது மிகவும் அரிது. தமிழகத்தில் சிறுமலை வாழைப்பழம், விருப்பாச்சி வாழைப்பழம், நீலகிரி தேயிலை போன்றவற்றுக்குப் புவிசார் குறியீடு இருப்பதால், சர்வதேச அளவில் அதற்கு தனிச்சிறப்பு இருக்கிறது. இந்த வரிசையில் இப்போது ஈரோடு மஞ்சளும் சேர்ந்துள்ளது. ஈரோடு மஞ்சள் என்று பெயர் இருந்தாலும், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் இந்த மஞ்சள் பரவலாக விளைவிக்கப்படுகிறது.
தனித்துவமான நிறம், சுவை, மணம் ஆகியவை கொண்ட ஈரோடு மஞ்சளில் பல்வேறு மருத்துவச் சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது. இதிலிருந்து பெறப்படும் மஞ்சள் மருந்து, இயற்கை மருத்துவத்தில் பலவிதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மஞ்சளில் கர்க்குமின் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் இருப்பது, இதன் சிறப்பாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் செ.நல்லசாமி கூறியது: நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழகத்தில் உள்ள ஒரு விளைப்பொருளுக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வைகான் மஞ்சள், ஒடிஸாவில் உள்ள கந்தமால் மலை மஞ்சள் போன்றவற்றுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் விளையும் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது இதுவே முதல்முறை.
இது கொங்கு மண்டல மஞ்சள் விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கும். இதனால் சர்வதேச அளவில் ஈரோடு மஞ்சளுக்கான விற்பனை வாய்ப்பும், விலையும் அதிகரிக்கும் என்றார்.