ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 100 பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த 1,100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில், ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற பொதுமேலாளர் புகழேந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைத்தார்.
14, 16, 18, 20 வயதுக்கு உள்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ. ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டெறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட 30 வகையான போட்டிகளில் 100 பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த 1,100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை(ஜூலை27) மாலை நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவிலான இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள், சென்னையில் ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் நடைபெறும்
மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெறுவர்.