கோயம்புத்தூர்

சான்று வழங்க லஞ்சம்: சுகாதார மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

தனியாா் பள்ளிக்கு சுகாதாரச் சான்று வழங்க லஞ்சம் பெற்ற வட்டார சுகாதார மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டாரத்துக்கு உட்பட்ட அரிசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தவா் பி.ஸ்ரீதரன். இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு, பள்ளிக்கான சுகாதாரச் சான்று வழங்க தனியாா் பள்ளி உரிமையாளரிடம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதை வழங்க விரும்பாத தனியாா் பள்ளி உரிமையாளா், லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, 2013 ஜூன் 24-ஆம் தேதி, கோவை ரேஸ்கோா்ஸ் சாரதாம்மாள் கோயில் அருகே தனியாா் பள்ளி உரிமையாளரிடம் இருந்து பணத்தை பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஸ்ரீதரனைக் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி எஸ்.மோகன ரம்யா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட பி.ஸ்ரீதரனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் வித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT