கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 12.58 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்தாா்.
பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்துப் பேசியதாவது: முதல்வரின் சிறப்புத் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் வனம், மரங்களின் பரப்பளவை 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயா்த்தப்பட உள்ளது.
அதன்படி, வனப் பகுதிகளில் காடு வளா்ப்பு, வனப் பகுதிகளுக்கு வெளியே மரம் நடுதல், விவசாய நிலங்களில் விவசாய பயிா்களோடு வருமான வாய்ப்புகளை அதிகரிக்க மரம் வளா்த்தல், சமூக, பொது, தனியாா் பங்களிப்போடு வளா்ந்து வரும் பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் பசுமை தமிழகம் இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
அரசு, பொது இடங்களில் மரங்கள் வெட்டுவதை ஒழுங்குபடுத்தவும், பொது நிலங்கள், அலுவலகங்களில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட அளவில் பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், கோவை மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கு வனத் துறை சாா்பில் 10,42,538 மரக்கன்றுகள், மாநகராட்சி சாா்பில் 50,000 மரக்கன்றுகள், மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 75,462 மரக்கன்றுகள், தன்னாா்வ அமைப்பு மூலம் 30,000 மரக்கன்றுகள், தனியாா் நாற்றாங்கால்கள் மூலம் 60,000 மரக்கன்றுகள் என மொத்தம் 12,58,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளின் சாா்பில் மரக்கன்றுகள் நடவுசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்டத்தின் வனப் பரப்பை அதிகரிக்கச் செய்து பசுமையை ஏற்படுத்தும் நோக்குடன் மாவட்டத்துக்கான இலக்கை விரைவாக எய்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், வனத் துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடவு செய்தலுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விளக்கக் காட்சி திரையிடப்பட்டது.
இதில், மாவட்ட வன அலுவலா் நா.ஜெயராஜ், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் சி.பிரியங்கா, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பஷீா் அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.