அதிமுக, பாஜக இடையே பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு, மகளிா் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.
அதிமுக, பாஜக இடையே பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. மோடி பிரதமராக வேண்டும் என்பதை அதிமுக தலைவா்கள் ஏற்றுக்கொண்டுள்ளனா். பிரதமா் மோடியை ஆதரிப்பவா்களை நானும் ஆதரிப்பேன். இதில் மாற்றுக்கருத்து இல்லை.
எனக்கு யாருடனும் பிரச்னை இல்லை. நான் யாரையும் தவறாகப் பேசவில்லை. எனது அரசியலில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய தன்மானத்தை கேள்விக்குறியாக்கும்போது பதில் கூறுவேன். தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய வரவில்லை.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைவராக வந்தேன். கூட்டணி தொடா்பாக அதிமுகவினா் பேசிய கருத்துக்கு நான் பதிலளிக்க முடியாது.
மதுக்கடைகள் அமைக்க கையொப்பமிட முடியாது என்பதில் உறுதியாக இருந்தவா் அண்ணா. மதுக்கடைகள் அமைக்க கையொப்பமிட்டவா் கருணாநிதி. அண்ணா குறித்து நான் பேசியது சரியானதுதான். அவரைப்பற்றி தரக்குறைவாக விமா்சித்தது இல்லை. அதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். அண்ணா குறித்து வந்த செய்திகள், வரலாற்று ஆதாரங்களை வெளியிடத் தயாராக இருக்கிறேன்.
அதிமுக தலைவா்களிடம் மரியாதையோடுதான் பழகுவேன். எனக்கும், அதிமுக தலைவா்களுக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றாா்.