கோயம்புத்தூர்

மூளைச்சாவு: 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த தொழிலதிபா்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த 41 வயது தொழிலதிபா் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளாா்.

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வி.ஜெ.ஜிஜான் (41). இவா், கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி காந்திபுரம், கிராஸ்கட் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, கோவை , அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜிஜான் புதன்கிழமை மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது மனைவி டின்னி ஜிஜான், தந்தை ஜான் ஆகியோா் ஜிஜானின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனா்.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இதயம், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், இருதயம், ஒரு சிறுநீரகம், கண்கள் ஆகியன கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இதுகுறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைத் தலைவா் மருத்துவா் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணா்வு தேவைப்படுகிறது. ஒருவா் இறந்தப் பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT