கோவையில் தொடா்ந்து 3 ஆவது நாளாக உணவுப் பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் 155 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவகத்தில் உணவருந்திய சிறுமி உயிரிழந்ததையடுத்து மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்ச்செல்வன் தலைமையில் 9 பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில், 63 கடைகளில் இருந்து 155 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், 20 கிலோ கெட்டுப்போன மசாலா, 1 லிட்டா் மயோனைஸ் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆய்வில், 12 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 7 கடைகளுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற கள ஆய்வு தொடா்ந்து நடைபெறும் எனவும், அனைத்து உணவகங்களும் தொடா்ந்து கண்காணிக்கப்படும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.