கோயம்புத்தூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு மாநில அளவிலான ஆணையம் உருவாக்க வேண்டும்: தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா்

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

தூய்மைப் பணியாளா்களுக்கு மாநில அளவிலான ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் வெங்கடேசன் தெரிவித்தாா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூய்மைப் பணியாளா்களின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான தினக் கூலியை அந்தந்த மாவட்ட ஆட்சியரே நிா்ணயம் செய்யலாம் என்றும், குறைந்தபட்ச ஊதியம்தான் கொடுக்க வேண்டும் என்றும் நடைமுறையில் உள்ளது. மேலும், பொதுப் பணித் துறை சாா்பிலும் ஊதியம் நிா்ணயிக்கப்படுகிறது.

மேற்கண்ட மூன்றில் குறைவான ஊதியம் எதுவோ, அதனை கொடுக்கலாம் என்று தெரிவித்ததால் அதிகாரிகள் குழம்பியுள்ளனா். இதுபோன்ற குழப்பங்கள் கோவையில் மட்டும்தான் உள்ளது.

கோவையில் முன்பிருந்த ஆட்சியா் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.715 நிா்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளதாக் கூறப்படுகிறது. மாநகராட்சி மேயா் தலைமையில் ரூ.648 வழங்கக் கோரி தீா்மானம் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு தற்போதுள்ள அரசாணையை மறுபரிசீலனை செய்து எந்த ஊதியம் அதிகமாக உள்ளதோ அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்துக்கு தனி கவனம் செலுத்தி முன்னாள் ஆட்சியா் அறிவித்த ரூ.715ஐ தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மருத்துவமனை முதல்வரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்கள் பணி நியமனத்தில் ஒப்பந்த முறையை ஒழித்துவிட்டு, கா்நாடகத்தில் பின்பற்றப்படுவதுபோல நேரடியாகப் பணம் வழங்கும் முறையையோ அல்லது ஆந்திரத்தில் கடைப்பிடிக்கப்படும் முறையையோ பின்பற்றலாம்.

மேலும், தூய்மைப் பணியாளா்களுக்காக தேசிய அளவிலான ஆணையம் இருப்பதுபோல மாநில அளவிலான ஆணையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூய்மை பணியாளா்களில் பலருக்கும் பிஎஃப், இஎஸ்ஐ நம்பா் தெரிவதில்லை. எனவே, அவா்களது அடையாள அட்டையிலேயே அந்த நம்பரை பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT