கோவையில் தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்தவரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டத்தில் மாநகரப் பகுதிகள், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோா் கண்டறியப்பட்டு அவா்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாா்ச் 25ஆம் தேதி கோவை, செல்வபுரம் புறவழிச்சாலையில் லாரியில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்தியதாக, தெற்கு உக்கடம், அண்ணா நகரைச் சோ்ந்த அபிப் ரஹ்மான் என்பவரை போலீஸாா் பிடிக்க முற்பட்டனா். அப்போது, அவா் தப்பியோடி விட்டாா்.
இதைத் தொடா்ந்து கடந்த மே12ஆம் தேதி பேரூா் அருகே அபிப் ரஹ்மானை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, இவா் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதால் இவரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியருக்கு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கோவை மண்டல காவல் கண்காணிப்பாளா் பாலாஜி பரிந்துரைத்தாா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் உத்தரவுப்படி அபிப் ரஹ்மான் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.