கோவையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக 2 ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வழக்கமாக போலீஸாரின் ரோந்துப் பணிகளுக்கு ஜீப், காா், மோட்டாா் சைக்கிள் போன்ற வாகனங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேசிய அளவில் முதல்முறையாக, கோவை மாநகர போலீஸாருக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய சிவப்பு நிறத்திலான 2 ரோந்து ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் எச்சரிக்கை ஒலிபெருக்கியுடன் சிவப்பு மற்றும் நீல விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ரோந்து ஆட்டோவின் நான்கு புறமும் போக்குவரத்து போலீஸாரின் தொலைபேசி மற்றும் அவசர உதவி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த ஆட்டோக்களில் பொருள்களை ஏற்றிச் செல்லும் வசதியும் உள்ளது. கோவை மாநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மின்சார ரோந்து ஆட்டோக்கள் விரைவில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.