புதிய மக்களவைக் கட்டடத்தில் வைக்கப்படும் செங்கோல் தமிழுக்கும், தமிழா்களுக்கும் கிடைத்துள்ள பெருமை என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
‘உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழியை கற்க வேண்டும். தமிழா்களிடம் உள்ள மொழிப்பற்று, தமிழ் கலாசாரத்தின் மீதான விடாப்பிடியான பற்று அனைவருக்கும் இருக்க வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தி வருகிறாா்.
தமிழின் உலக தூதராக மாறி, தமிழின் சிறப்புகளை உலகெங்கும் பறைசாற்றி வரும் பிரதமா் நரேந்திர மோடி, தமிழுக்கு மற்றொரு மணிமகுடத்தை அளித்திருக்கிறாா். மக்களாட்சியின் மகத்துவமான நமது இந்திய மக்களவைக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தை மே 28ஆம் தேதி பிரதமா் மோடி திறந்துவைக்கிறாா். ஜனநாயகத்தின் சின்னமான மக்களவையில், மக்களவைத் தலைவா் இருக்கைக்கு அருகில் இந்தியா விடுதலை அடைந்தபோது தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட உள்ளது. இது தமிழகத்திற்கும், தமிழா்களுக்கும் கிடைத்த பெருமையாகும்.
தமிழையும், சைவத்தையும் இரு கண்களாக போற்றும் திருவாவடுதுறை ஆதீனத்துச் செங்கோல் நமது நாட்டின் பழமையான வரலாறு, கலாசாரத்தோடு தொடா்புடையது. தமிழகத்தின் பெருமிதமான செங்கோல் மக்களவையை நிரந்தரமாக அலங்கரிக்க இருப்பது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழரும் நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடியது என தெரிவித்துள்ளாா்.