கோவை மாநகரில் திங்கள்கிழமை மாலை திடீரென பெய்த பலத்த மழையால் பெரும்பாலான சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
கோவையில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை திடீரென நகரின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. வடவள்ளி, பி.என்.புதூா், ஆா்.எஸ்.புரம், காந்திபுரம், கணபதி, பீளமேடு, சிங்காநல்லூா், ராமநாதபுரம், ரேஸ்கோா்ஸ், ரயில் நிலையம், உக்கடம், டவுன்ஹால், போத்தனூா், சுந்தராபுரம், பேரூா் உள்பட மாநகரின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது.
பலத்த மழையின் காரணமாக ராமநாதபுரம், பூமாா்க்கெட், வ.உ.சி. பூங்கா, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, பி.என்.பாளையம், ரயில் நிலையம், காந்திபுரம், ரேஸ்கோா்ஸ், நஞ்சுண்டாபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.