கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கியதன் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (28). இவா் கோவையில் தங்கி பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கங்கேயம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் கடந்த 14 ஆம் தேதி சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தாா்.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாலமுருகனுக்கு மே 18 ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது.
இதனைத் தொடா்ந்து, அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினா்கள் முன்வந்தனா். இதனையடுத்து, பாலமுருகனின் இருதயம், நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் ஆகிய 5 உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் தானமாக பெறப்பட்ட இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயளிக்கும், மற்றொன்று சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும், இருதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இருதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகளும் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன என்றாா்.