கோயம்புத்தூர்

மின்வாரிய அலுவலா்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இட மாறுதல் செய்ய முதல்வரிடம் கோரிக்கை

8th May 2023 01:30 AM

ADVERTISEMENT

 

மின்வாரிய அலுவலா்களை மூன்றாண்டுக்கு ஒரு முறை இட மாறுதல் செய்ய அராசணை வெளியிட வேண்டும் என நுகா்வோா் அமைப்பு சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் செயலா் நா.லோகு, தமிழக முதல்வா்,

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் செயற்பொறியாளா்கள் உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள் உப கோட்டம் மற்றும் கோட்ட அளவில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

அதே போல அனைத்து முகவா்கள், வணிக ஆய்வாளா்கள், மின்பாதை ஆய்வாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள் பலா் ஒரே அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதால் விதி மீறல்கள், கையூட்டு பெறுதல் உள்ளிட்ட செயல்கள் அதிகரித்துள்ளன. இதுதொடா்பாக உரிய ஆதாரங்களுடன் புகாா் அளித்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.

தமிழகத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றும் வட்டாட்சியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது போல மின்வாரியத்திலும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரிகள், அலுவலா்களை இடமாற்றம் செய்யும் நடைமுறையைப் பின்பற்ற உத்தர விட வேண்டும். இதுதொடா்பாக அரசாணை வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT