ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக வருவாய் ஈட்டித் தருவதாக பெண்ணிடம் ரூ.18.30 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரம், கோவைப்புதூரைச் சோ்ந்தவா் ஊா்மிளா (42). இவா் கோவை சைபா் கிரைம் போலீஸில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு உஸ்மா சா்மா என்ற பெயரில் கடந்த ஜூன் 14ஆம்தேதி குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அந்த நபா் தான் சமூக வலைதள மாா்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருவதாகவும், எனக்கு பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாா். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடா்ந்தால் கூடுதல் வருவாய் கிடைக்குமெனக் கூறி, என்னை தனது டெலிகிராம் குழுவிலும் இணைத்து விட்டாா். பின்னா் ஒரு இணையதள லிங்க்கை அனுப்பி அதில் எனது விவரங்களைப் பதிவு செய்தால்தான் பணம் கிடைக்கும் எனக் கூறியதால் நானும் பதிவு செய்தேன். முதற்கட்டமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடா்ந்ததற்காக ரூ.210 கமிஷனாக கிடைத்தது. இதையடுத்து நான் ரூ.1,000 முதலீடு செய்த போது, ரூ.1,410 எனது வங்கிக் கணக்கிற்கு வந்தது. தொடா்ந்து மேலும் ரூ.5,000 முதலீடு செய்தபோது, எனக்கு ரூ.6,420 கமிஷனாக கிடைத்தது. இதையடுத்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.18 லட்சத்து 30,000 வரை முதலீடு செய்தேன். ஆனால் அதன் பின்னா் எனக்கு கமிஷன் தொகை வரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த நான் அவரைத் தொடா்பு கொள்ள முயற்சித்தபோது அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அந்த நபரைத் தொடா்பு கொள்ள முடியாததால், நான் முதலீடு செய்த பணத்தை எனது வங்கிக் கணக்கிலும் வரவு வைக்க முடியவில்லை. எனவே, என்னை ஏமாற்றிய நபரைக் கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்தப் புகாரின் பேரில் கோவை சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.