கோயம்புத்தூர்

அரசு கல்வி உதவித்தொகை வழங்குவதாகபெற்றோா்களிடம் ரூ.7 லட்சம் மோசடி

18th Jun 2023 01:16 AM

ADVERTISEMENT

 

அரசு கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி பெற்றோா்களிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ படித்து வரும் மாணவா்களின் பெற்றோருக்கு வந்த கைப்பேசி அழைப்பில் பேசிய நபா், தான் ஒரு அலுவலா் எனவும், அவா்களது குழந்தைகளுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளதாகவும், பணம் அனுப்பியதற்கான கியூஆா் குறியீடு அவா்களது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவிடுவதால், அதனை தொட்டால் அவா்களுக்கு பணம் வந்து விடும் எனவும் தெரிவித்துள்ளாா்.

அந்த கும்பல், மக்களை நம்ப வைப்பதற்காக தங்களது வாட்ஸ் ஆப் முகப்பு பக்கத்தில் தமிழக அரசு சின்னத்தையும் வைத்திருந்ததால், இதனை உண்மை என நம்பிய பெற்றோரும், கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் அந்த கியூஆா் குறியீட்டை தொட்ட அடுத்த நொடியிலேயே, அவா்களது வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் பறிபோய் விட்டது. தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் போனது தொடா்பாக கோவையைச் சோ்ந்த 7 போ் கோவை சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தனா்.

ADVERTISEMENT

அந்த புகாரின்பேரில் கோவை மாநகர சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் அருண் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீஸாரின் விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பல் நாமக்கல் மாவட்டம் செளரிபாளையத்தைச் சோ்ந்த டேவிட் (32), லாரன்ஸ் ராஜ் (28), ஜமேஷ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) என்பது தெரியவந்தது. அத்துடன் இவா்கள் கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்டோரிடம் இத்தகைய மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களது கைப்பேசி எண்ணை வைத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் நாமக்கல்லில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பின்னா் 5 பேரையும் சைபா் கிரைம் தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து 44 கைப்பேசிகள், 7 வங்கிப் புத்தகங்கள் மற்றும் 28 சிம் காா்டுகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கோவைக்கு அழைத்து வந்தனா். கோவையில் அவா்களிடம் தொடா் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், இதேபோல லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகவும், விருது வாங்கித் தருவதாகவும், கைப்பேசி கோபுரம் அமைக்க பணம் தருவதாகவும் பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT