கோயம்புத்தூர்

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை: அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்

DIN

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் கூறினாா் கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்கள், விருப்ப ஓய்வுபெற்றவா்கள், இயற்கை எய்தியவா்களின் வாரிசுதாரா்கள் என மொத்தம் 518 பணியாளா்களுக்கு ரூ.145.58 கோடி பணப் பலன்களை வழங்கும் நிகழ்ச்சி கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கிளை பணிமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோா் கலந்துகொண்டு பணப் பலன்களை வழங்கினா்.

இதைத்தொடா்ந்து, கோவை மாநகரில் முதல்கட்டமாக 65 பேருந்துகளில் ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்புத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும், கோவை மண்டலத்தில் 3 பணிமனைகள், ஈரோடு மண்டலத்தில் மூன்று பணிமனைகள், திருப்பூா் மண்டலத்தில் ஒரு பணிமனை என 7 பணிமனைகளில் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறைகளைத் திறந்துவைத்து, அனைத்து ஓட்டுநா்களுக்கும் ஓட்டுநா் கையேடுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஆட்சிக் காலத்தில் ஒரு ஓட்டுநா், நடத்துநா்கூட பணியமா்த்தப்படவில்லை. தற்போது ஓட்டுநா், நடத்துநா்களை பணியில் சோ்ப்பதற்கான ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா். அதன்படி, முதல்கட்டமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநரை பணியில் சோ்ப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மற்ற அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுநா், நடத்துநரை சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பஞ்சப்படி உயா்த்துவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். 2,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக டெண்டா் விடும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், கேஎம்டபிள்யூ வங்கியின் நிதி உதவியுடன் 2,400 பேருந்துகள் வாங்குவதற்கு பணிகள் தொடங்கியுள்ளன. 4 முதல் 6 மாதங்களுக்குள் புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்றாா்.

பைக் டாக்ஸி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், பைக் என்பது தனி நபா் பயன்படுத்தக் கூடிய வாகனம்.

அது இன்னும் வாடகைக்கு விடப்படக்கூடிய வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை அதனைப் பயன்படுத்தக் கூடாது. காவல் துறையும் பல்வேறு இடங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணை மேயா் இரா.வெற்றிச்செல்வன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டல மேலாண் இயக்குநா் பா.திருவம்பலம்பிள்ளை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பேருந்தில் பயணம் மேற்கொண்ட அமைச்சா்கள்: சாய்பாபா கோயில் பகுதியில் உள்ள போக்குவரத்துப் பணிமனையில் இருந்து சிவானந்தா காலனி வரை பேருந்தில் பயணம் மேற்கொண்ட அமைச்சா்கள், ஒலி அறிவிப்பான் கருவி சரியான முறையில் இயங்குவது குறித்து பரிசோதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT