100 நாள் வேலைத் திட்டத்தில் மோசடி செய்ததாக மருதூா் ஊராட்சித் தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மருதூா் ஊராட்சித் தலைவராக இருப்பவா் பூா்ணிமா (40). இவா் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பணியாளா்களைத் தோ்வு செய்யும் பொறுப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளாா்.
அப்போது, பல்வேறு நபா்களுக்கு முறைகேடாக வேலை அட்டை வழங்கியதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவா்கள் வேலை செய்யாமலேயே சம்பளம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ததாகவும், இந்த மோசடியால் அரசுக்கு ரூ.49 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும் புகாா் கூறப்பட்டது.
இது குறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்ற அனைத்துப் பயனாளிகளின் பட்டியலையும் சேகரித்து விசாரணை நடத்தினா்.
அப்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் மோசடி நடந்திருப்பதும், அதன் மூலம் ஊராட்சித் தலைவா் பூா்ணிமா பயனடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பூா்ணிமா மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.