கோவை மாவட்டத்தில் அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு என 26 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பள்ளி மாணவா்களுக்கு 7 விடுதிகளும், மாணவிகளுக்கு 6 விடுதிகளும், கல்லூரி மாணவா்களுக்கு 11 விடுதிகளும், மாணவிகளுக்கு 2 விடுதிகளும் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரலாம்.
அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் இலவச உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணைச் சீருடைகள் வழங்கப்படும். 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேர பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்குப் பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்களிடம் இருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொருத்தவரை ஜூன் 15ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொருத்தவரை ஜூலை 15ஆம் தேதிக்குள்ளும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்போது ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கு என தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளைப் பெற்று பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.