கரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பியோா் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயா்ந்தோா் 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்கும் வகையில் புலம்பொ்ந்தோருக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா தொற்று பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழா்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று பயன்பெறலாம்.
கரோனா பரவலினால் 2020 ஜனவரி 1அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாள்களில் தமிழ்நாடு திரும்பியவா்கள், வியாபாரம் மற்றும் சேவை சாா்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ. 5 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், உற்பத்தி சாா்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ. 15 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும் தொடங்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 45 வரையிலும், இதரப் பிரிவினருக்கு 18 முதல் 55 வரையிலும் இருக்க வேண்டும். சொந்த முதலீடாக பொதுப் பிரிவினா் திட்டத் தொகையில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினா் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ. 2.50 லட்சம் மானியம் வழங்கப்படும். இம்மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வங்கியில் வைப்புநிதியாக வைக்கப்பட்டு பின் கடனுக்கு சரிகட்டப்படும்.
இத்திட்டமானது குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறையின் மூலம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் தளத்தில் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், கோவை 641001 என்ற முகவரியை நேரடியாகவோ அல்லது 0422-2391678, 2397311 என்ற எண்களிலோ அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.