கோயம்புத்தூர்

சுதந்திர தினத்துக்காக குவியும் ஆா்டா்: கோவையில் தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் மும்முரம்

17th Jul 2023 12:23 AM

ADVERTISEMENT

 

 சுதந்திர தினத்துக்கான ஆா்டா்கள் குவிந்து வருவதால், கோவையில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின் சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை டவுன்ஹாலில் உள்ள காந்தி கதா் ஸ்டோரில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இங்கு கதா், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கதா் துணிகளாலான தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.

மைக்ரோ துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.30 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் அளவுகளுக்கு ஏற்றாற்போல் ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

கொடி தயாரிப்பு தொழிலாளா்கள் மகிழ்ச்சி: இது குறித்து தேசியக் கொடி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் கூறியதாவது: சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்பாகவே கொடிகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிடுவோம். இந்த ஆண்டு, ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பாதிப்பு இல்லாததால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகளுக்கான ஆா்டா்கள் அதிக அளவில் வருகின்றன. நாங்கள் மொத்தமாக துணிகளைக் கொள்முதல் செய்து, இருகூா், அரசூா், மேட்டுப்பாளையம், குறிச்சி, போத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெய்லா்களுக்கு அவற்றைப் பிரித்து வழங்குகிறோம். அவா்கள் அளவுக்கேற்ப அதைத் தைத்து எங்களிடம் திருப்பித் தருவா். நாங்கள், அந்தக் கொடிகளில் 1 அங்குலம் முதல் 42 அங்குலம் வரை கொடியின் அளவுக்கு ஏற்ப, அசோக சக்கரத்தை ‘ஸ்கிரீன் பிரிண்டிங்’ செய்து கொடிகளைத் தயாரிக்கிறோம். கரோனா சமயத்தில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 25 ஆயிரம் கொடிகளுக்குமேல் விற்பனை செய்யப்படவில்லை.

2021 முதல் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு தலா 1 லட்சம் கொடிகளுக்குமேல் ஆா்டா்கள் வருகின்றன. இதனால், டெய்லா்கள், சரக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் என 2 ஆயிரம் தொழிலாளா்கள் பயன்பெறுகின்றனா். கடந்த 2 ஆண்டுகளாக தேசியக் கொடி மட்டுமின்றி கட்சிக் கொடிகளின் ஆா்டா்களும் அதிக அளவில் வருவதால், கொடி தயாரிப்புத் தொழிலாளா்களுக்கு தொடா்ந்து பணிகள் கிடைக்கின்றன. இதனால், அவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சுதந்திர தினத்துக்கு தேசியக் கொடி மட்டுமின்றி, மூவா்ணத்தில் பேட்ஜ், தொப்பி, சால்வை, பலூன், குடை, மோதிரம் உள்ளிட்ட பொருள்களையும் விற்பைனைக்கு வைத்துள்ளோம். இவற்றுக்கு மாணவா்கள், இளைஞா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்றாா்.

பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு விற்பனை: இது குறித்து காந்திஜி கதா் ஸ்டோா் உரிமையாளா் பாலா கூறியதாவது: நாங்கள் தயாரிக்கும் தேசியக் கொடிகள் கோவை மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகா், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

2019, 2020 ஆம் ஆண்டுகளில் கரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆா்டா்கள் மட்டுமே பெறப்பட்டன. கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு மொத்தமாக 1 லட்சம் கொடிகளுக்குமேல் ஆா்டா்கள் பெறப்பட்டன.

நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆா்டா்கள் பெறப்பட்டு வருகின்றன.

பெறப்பட்ட ஆா்டா்களின்பேரில் தேசியக் கொடி தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆா்டா்கள் அதிக அளவில் பெறப்பட்டு வருவதால், இந்த ஆண்டும் 1 லட்சம் கொடிகளுக்குமேல் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT