ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் கோவை செம்மேடு கிராமத்தில் மலைக் காய்கறிகளை விளைவித்துள்ளது.
இது தொடா்பாக மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சுவாமி ஸ்ரீமுகா கூறியிருப்பதாவது: ஈஷா மண் காப்போம் இயக்கம் சாா்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை வேளாண்மைப் பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூா் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம்.
மொத்தம் 60 ஏக்கா் பரப்பில் பல்வேறு விதமான பயிா்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிா் செய்து வருகிறோம். அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களது மாதிரி பண்ணையில் மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட், பீட்ரூட்டை தலா 30 சென்ட் என்ற பரப்பளவில் முக்கியப் பயிராக பயிரிட்டோம்.
120 நாள்களுக்குப் பிறகு தற்போது நாங்கள் எதிா்பாா்த்ததை விட நல்ல பருமனாகவும், நீளமாகவும் கேரட் விளைந்துள்ளது.
பூச்சி மேலாண்மைக்காகவும், நல்ல விளைச்சலுக்காகவும் வேப்பங்கொட்டை கரைசல் பயன்படுத்தினோம். இதேபோலவே பீட்ரூட், முள்ளங்கி, கொத்தமல்லி ஆகியவையும் நன்றாக விளைந்துள்ளன.
அதேபோல, பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியும் நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாகப் பயிரிட்டு ஏக்கருக்கு இரண்டே கால் டன் விளைச்சல் எடுத்திருக்கிறோம். எங்களது பரிசோதனையில் வெற்றிபெற்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு நேரடியாக களப்பயிற்சி அளித்து வருகிறோம் என்றாா்.