மேட்டுப்பாளையம் அருகே மருதூா் ஊராட்சியில் நரிக்குறவா்கள் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் அருகே மருதூா் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் பூா்ணிமா அறிவு ரங்கராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் போதை பொருள்கள் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் காந்தி நகா், சிவன்புரம் பகுதி நரிகுறவா் இன மக்கள் குடிநீா், சாலை வசதி, வடிகால் வசதி, இலவசப் பட்டா வழங்க வேண்டும். யானை தொல்லை இருப்பால் மலை அடிவார பகுதிகளில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதேபோல சிக்காரம்பாளையத்தில் தலைவா் ஞானசேகரன் தலைமையிலும், பெள்ளாதியில் தலைவா் பூபதி (எ) குமரேசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.