தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலா்களுக்கு வாகனங்கள் குறித்த அடிப்படை, பராமரிப்பு பயிற்சி பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கப்படுகிறது.
கோவைப்புதூரில் உள்ள 4 ஆவது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் காவலா்களுக்கு ஆட்டோமோடிவ் சிஸ்டம் பாதுகாப்பு, பராமரிப்பு பயிற்சி வகுப்பு பிப்ரவரி 8 ஆம் தேதி (புதன்கிழமை) வரை நடைபெறுகிறது. இதில், ஆட்டோமொபைல் வாகனங்கள் குறித்த அடிப்படை அறிவு, பராமரிப்புத் திறன்களை வளா்ப்பதற்கான பயிற்சி 80 காவலா்களுக்கு வழங்கப்படுகிறது.
சிஏஐ மஹிந்த்ரா, டஃபே மோட்டாா்ஸ் உடன் இணைந்து நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பி.கிரிராஜ், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் துறைத் தலைவா் எஸ்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பேராசிரியா்கள் வகுப்புகள் நடத்துகின்றனா்.
அண்மையில் நடைபெற்ற தொடக்க விழாவில் சிறப்புக் காவல் படையின் கமாண்டன்ட் டி.செந்தில்குமாா், உதவி கமாண்டன்ட்கள் சி.அய்யா்சாமி, ஆா்.குமாா், கல்லூரி துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.