சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.19 கோடி மதிப்பிலான 3.75 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடா்பாக 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.
சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த 3 பயணிகளை கோவை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் தனிப் படையினா் சோதனையிட்டனா். அப்போது, உடைந்த நிலையில் இருந்த தங்கம் உள்ளாடைகளுக்குள்ளும், மலக்குடலிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு 3.75 கிலோவாகும். இதன் மதிப்பு சுமாா் ரூ.2.19 கோடி எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தங்கத்தை கடத்தி வந்த திருச்சியைச் சோ்ந்த அபுபக்கா் சித்திக் (34), பிரியா (36), கோவையைச் சோ்ந்த ஸ்ரீமதி (29) ஆகிய மூன்று பேரை கைது செய்த அதிகாரிகள், அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.